24. நம்பிக்கை

                                                                             24. நம்பிக்கை

 

 

துரியோதனனும் கர்ணனும் நெருங்கிய நண்பர்கள்.  துரியோதனனுக்குக் கர்ணனுடைய நல்ல குணம் தெரியும்.  அதனால் தன்னுடைய அரண்மனையில் கர்ணனுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தான்.  அந்தப்புரத்துக்குள்கூடக் கர்ணன் தாராளமாகப் போகலாம்.

 

கர்ணன் சில சமயம் அந்தப்புரத்தில் துரியோதனனுடைய மனைவியோடு பேசிக்கொண்டிருப்பான்; சில சமயம் அவளோடு சதுரங்கம் விளையாடுவான். 

 

ஒரு நாள் கர்ணனும் துரியோதனனுடைய மனைவியும் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.  ஆட்டம் விறுவிறுப்பாய் இருந்தது.  கர்ணன் அந்த ஆட்டத்தில் தான் வெற்றி அடையப் போகிறோம் என்று நினைத்தான்.  அப்போது துரியோதனன் அங்கே வந்தான்.  அவன் கர்ணனுக்குப் பின்பக்கமாக வந்துகொண்டிருந்தான்.  அது கர்ணனுக்குத் தெரியவில்லை.  அவன் ஆட்டத்தில் மும்மரமாய் இருந்தான். 

 

கர்ணனுக்கு எதிரே உட்கார்ந்திருந்த துரியோதனன் மனைவி தன் கணவன் வருவதைப் பார்த்துவிட்டாள்.  கணவன் அறைக்குள் வந்தால் மனைவி உட்கார்ந்திருப்பது  மரியாதை இல்லை அல்லவா? அதனால் அவள் எழுந்தாள்.  “எங்கே எழுந்திருக்கிறாய்?  தோற்கப்போகிறோமே என்று பயப்படுகிறாயா?  ஆட்டம் முடிந்தால்தான் நீ எழுந்திருக்கலாம், உட்கார்” என்று கர்ணன் சொன்னான்.  அவள் உட்காரவில்லை.  கோபத்தில் அவளுடைய மேகலையைப் பிடித்துக் கர்ணன் இழுத்தான்.  மேகலை ஒடிந்தது.  அதிலிருந்து முத்துக்களும் மணிகளும் சிதறின.

 

“கவலைப்படாதே!  நான் பொறுக்குகிறேன்.  நானே மேகலையில் கோத்துவிடுகிறேன்,  ஆட்டத்தை முடித்துவிடு” என்று ஒரு குரல் கேட்டது.  கர்ணன் திரும்பிப் பார்த்தான்.  துரியோதனன் நின்றுகொண்டிருந்தான்!  “நான் அவனுடைய மனைவியைக் கோபத்தில் தொட்டிருக்கக்கூடாது.  நான் செய்த காரியத்தைப் பார்த்தும் துரியோதனனுக்குக் கோபம் வரவில்லையே!  அவனுக்கு எவ்வளவு பெருந்தன்மை!  என் மேல் எவ்வளவு நம்பிக்கை!” என்று கர்ணன் நினைத்தான்.

 

உணர்ச்சி மிகுதியால் கர்ணனுக்குப் பேச முடியவில்லை.

 

Glossary

 

நெருங்கிய                                                                         intimate, close

நண்பர்                                                                                  friend

குணம்                                                                                 character

சுதந்திரம்                                                                            freedom

அந்தப்புரம்                                                                       queen’s quarter, harem

தாராளமாக                                                                       freely

சதுரங்கம்                                                                         the game of chess

ஆட்டம்                                                                            game

விறுவிறுப்பாக                                                             briskly

வெற்றி அடை (அடைய, அடைந்து)                     win (ஜெயி)

மும்மரமாய்                                                                  engrossed

எதிரே                                                                                opposite

உட்கார்                                                                             sit

அறை                                                                               room

மரியாதை                                                                     respect

எழு  (எழ, எழுந்து)                                                     rise

எழுந்திரு (எழுந்திருக்க, எழுந்திருந்து)           rise

தோற்கப் போ (போக, போய்)                                 lose

பயப்படு  (பயப்பட, பயப்பட்டு)                             fear

மேகலை                                                                      waist ornament (ஒட்டியாணம்)

பிடித்து இழு  (இழுக்க, இழுத்து)                        pull and drag

ஒடி  (ஒடிக்க, ஒடித்து)                                            break

முத்து                                                                           pearl

மணி                                                                             sapphire

சிதறு  (சிதற, சிதறி)                                                scatter

கவலைப்படு  (-பட, (-பட்டு                                   worry, grieve

பொறுக்கு  (பொறுக்க, பொறுக்கி)                   collect, pick up

கோர்  (கோர்க்க, கோர்த்து)                                  tie together

முடி  (முடிக்க, முடித்து)                                      finish

குரல்                                                                            voice

கேள் (கேட்க, கேட்டு)                                           ask

தொடு  (தொட, தொட்டு)                                     touch

காரியம்                                                                    deed

பெருந்தன்மை                                                      magnanimity, generosity

நம்பிக்கை                                                              trust

உணர்ச்சி                                                                 emotion, feeling

மிகுதி                                                                       excess

 

Exercise

 

. கீழே உள்ள வார்த்தைகளுக்குத் தமிழில் விளக்கி அர்த்தம் எழுது.

(Describe in Tamil the meanings of the words below)

 

1. அரண்மனை

2. அந்தப்புரம்

3. சதுரங்கம்

4. மேகலை

5. முத்து

 

. கீழே உள்ள வார்த்தைகளுக்கு எதிர் வார்த்தை எழுது.

(Write words that are opposites of the words below)

 

1. நண்பர்கள்

2. நல்ல குணம்

3. உட்கார்

4. தோற்றுவிடு

5. வருத்தப்படு

 

This text is about an incident described in the Tamil version of Mahabharata by Villiputturaar (14th century), which is given below in the verse form as in the epic (The words in the two verses, however, are given without sandhi combining them across word boundaries to fit the units of the meter of the verses known as விருத்தப்பா).

To win the war for Pandavas, Krishna asks Kunti to meet with Karna, her son born to the Sun god, Surya and persuade him to come over to the side of Pandavas, his siblings.  Karna as an infant was let by his mother to float in a river and he grows up, without knowing his birth history, in the palace of Duryodhana, who is his best friend and supporter.

The two verses are Karna’s reply to Kunti’s pleading, which describe his relationship with Duryodhana and his loyalty to him. This refusal of Karna to concede his mother’s plea is cited in Tamil cultural tradition as illustrative of an ideal friendship.

 

இ. Translate the prose renderings of the verses given below the verses.

 

வில்லி பாரதம்: உத்தியோக பருவம்: கிருட்டிணன் தூதுச் சருக்கம் 254, 255 

The verses are given without sandhi.

 

பெற்ற நீர் மகவு அன்பு இலாமையோ அன்றிப்

பெரும்  பழி நாணியோ விடுத்தீர்;

அற்றை நாள் தொடங்கி என்னை இன்று அளவும்

ஆர் உயிர்த் துணை எனக் கருதிக்

கொற்ற மா மகுடம் புனைந்து அரசு அளித்துக்

கூட உண்டு உரிய தம்பியரும்

சுற்றம் ஆனவரும் என் அடி வணங்கத்

தோற்றமும்  ஏற்றமும் அளித்தான்

 

பெறு ‘give birth to’

நீர்         நீங்கள்

மகவு  பிள்ளை

இலாமையோ  இல்லாததாலோ

அன்றி  அல்லது

பெரும் பெரிய

பழி ‘blame’

நாணியோ பயந்தோ ‘unwilling to take’

விடுத்தீர் கைவிட்டீர்கள் ‘(you) abandoned (me)’

அற்றை  அந்த

தொடங்கி ‘beginning’

அளவும்  வரைக்கும்

ஆருயிர்  ‘very dear’

துணை ‘companion’

என  என்று

கருதி  நினைத்து

கொற்ற ‘royal’

மா ‘great’

மகுடம் ‘crown’

புனைந்து  சூட்டி ‘making (me) wear’

அரசு ‘kingdom’

அளித்து   கொடுத்து

கூட   சேர்ந்து ‘together’

உண்டு  சாப்பிட்டு

உரிய ‘his own’

தம்பியர்  தம்பிகள்

சுற்றம் ஆனவர் ‘those who are his kin’

அடி   காலடி ‘ (at the) feet’

வணங்க ‘as (they) pay respect’

தோற்றம்  பதவி ‘position’

ஏற்றம் உயர்வு  ‘elevation’

 

Karnan talking to his mother:

என்னைப் பெற்ற நீங்கள் பிள்ளைப் பாசம் இல்லாததாலோ அல்லது வரும் பழிக்குப் பயந்தோ என்னைக் கைவிட்டீர்கள். அன்றிலிருந்து இன்றுவரை என்னைத் தன் உயிர்த் தோழனாக நினைத்து, எனக்குப் பெரிய மகுடம் சூட்டி, ஆள நாடு கொடுத்து, ஒன்றாகச் சாப்பிட்டு, தன் சொந்தத் தம்பிகளும் சொந்தக்காரர்களும் என்னைப் பணிந்து வணங்கும்படி எனக்குப் பதவியும் உயர்வும் கொடுத்தான் (துரியோதனன்).

 

மடந்தை பொன்திரு மேகலை மணி உகவே

மாசு அறத் திகழும் ஏகாந்தம்

இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப

எடுக்கவோ கோக்கவோ என்றான்;

திடம் படுத்திட வேல் இராசராசனுக்குச்

செருமுனைச் சென்று செஞ்சோற்றுக்

கடன் கழிப்பதுவே எனக்கு இனிப் புகழும்

கருமமும் தருமமும் என்றான்.

 

மடந்தை     பெண், (here) அரசி ‘queen’

பொன்    தங்கம் ‘gold’

திரு   அழகிய ‘beautiful’

மேகலை     ஒட்டியாணம் ‘waist ring’

மணி     முத்து ‘pearls’

உகவே    விழுந்து சிதற ‘as (they) fell and scattered’

மாசற    ‘without blemish’

திகழும்    இருக்கும் ‘appearing’

ஏகாந்த(ம்)   தனிமையான ‘lonely’

இடம்தனில்      இடத்தில்

புரிந்தே         (ஒரு காரியம்) செய்து ‘having done something’

அயர்ந்திருப்ப நொந்துபோயிருக்கும்போது ‘as (I) was sitting lost’

எடுக்கவோ   ‘to pick up (the pearls) 

கோக்கவோ  ‘to string (the pearls)

-ஓ    அல்லது ‘or’

திட(ம்)படுத்திட பலப்படுத்த ‘to strengthen (him)’

வேல்     ‘spear (wearing)’

இராசராசன்   ‘king of kings’ i.e. Duryodhana

செருமுனை   படைக்களம் ‘battle field’

சென்று       போய்

செஞ்சோற்றுக் கடன்   ‘(my) indebtedness’

கழிப்பது     தீர்ப்பது ‘paying back’

இனி         இனிமேல் ‘hereafter’

புகழ்     (the thing giving me) fame’

கருமம்    ‘(preordained) action’

தருமம்    ‘duty, dharma’

 

அரசியின் அழகிய தங்க ஒட்டியாணத்திலிருந்த முத்துகள் கீழே விழுந்து சிதறும்படி, குற்றம் இல்லாத தனிமையான இடத்தில் நான் ஒரு காரியம் செய்து நொந்துபோயிருக்கும்போது வந்த துரியோதனன், முத்துக்களை எடுக்கவா, திரும்பக் கோர்க்கவா என்று கேட்டான்.  பலப்படுத்தும்பொருட்டு அந்த வேல் ஏந்திய ராஜராஜனுக்காகப் போர்க்களத்திற்குப் போய் என் நன்றிக் கடனைத் தீர்ப்பதுதான் எனக்குப் புகழ் தருவதும், நான் செய்ய வேண்டிய கருமமும் என்னுடைய தருமமும் ஆகும்.