உரையாடல் 15
கோயிலைப் பற்றிச் சொல்லுங்கள்
ஜிம் - நீங்கள் கோயிலைப் பற்றிச் சொன்னீர்களே, அதைக் கேட்டு நான் போன
வாரம் கோயிலைப் பார்க்கப் போனேன். ஆனால் என்னை உள்ளே
விடவில்லை. ஏன்?
ராஜா - இந்துக்களைத் தவிர மற்றவர்கள் கோயிலுக்குள்ளே போகக்கூடாது.
ஜிம் - கோயிலுக்குள்ளே நுழையவேகூடாதா?
ராஜா - கோயிலுக்குள்ளே கொஞ்ச தூரம் வரைக்கும் போகலாம். நீங்கள்
போய்ப் பார்த்தீர்களா?
ஜிம் - இல்லை. எனக்குத் தயக்கமாக இருந்தது. சுதந்திரத்துக்கு
முன்னாலேயே கோவிலை எல்லாருக்கும் திறந்துவிடவில்லையா?
ராஜா - இந்துக்களில்தான் எல்லாருக்கும் திறந்துவிட்டார்கள்.
ஜிம் - என்னைப்போல் வெளிநாட்டுக்காரர்களுக்கு உங்கள் கோயிலையும்
சிற்பங்களையும் பார்க்க ரொம்ப ஆசை.
ராஜா - நானும் இதைப் பற்றிக் கோவில் அதிகாரிகளிடம் பேசிப் பார்த்தேன்.
ஆனால் அவர்கள் விட்டுக்கொடுக்கவில்லை.
ஜிம் - இது எங்களுக்கு ரொம்ப ஏமாற்றமாக இருக்கிறது. இதைப் பற்றித்-
தான் நான் உங்களிடம் கேட்க வந்தேன்.
ராணி - இந்தாருங்கள், நான் கொஞ்சம் பலகாரம் செய்துவைத்திருக்கிறேன்.
உங்கள் சிநேகிதரைச் சாப்பிடச் சொல்லுங்கள்.
ராஜா - அதை ஒரு தட்டில் வைத்து இங்கே கொண்டுவா. கூடக் கொஞ்சம்
தண்ணீரும் கொண்டுவா. இவருக்கு நம் பலகாரம் ரொம்ப காரமாக
இருக்கும்.
ராணி - இது இனிப்புதான். இந்தாருங்கள்.
ராஜா - ஜிம், இதைச் சாப்பிட்டுப் பாருங்கள். உங்களுக்குப் பிடிக்கிறதோ
என்னமோ!
ஜிம் - இது ரொம்ப நன்றாக இருக்கிறது. கடைகளில் கிடைக்குமா?
ராஜா - எல்லாக் கடைகளிலும் கிடைக்காது. நீங்கள் கவலைப்படாதீர்கள்.
நான் உங்களுக்குக் கொடுத்து விடுகிறேன்.
ஜிம் - ரொம்ப நல்லது.